போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்

 போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!

 நின் பொன்னடிக்குப்

பல் லாயிரம் போற்றிகாண்



SAKETHARAMAN

Raagamaalika


https://youtu.be/EvvdTVu6ehk?si=N4teFU_a_M4H-RPw


போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்

பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண்

சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்

செய்ய தாமரைத் தேமலர் போலோளி

தோற்றி நின்றனை பாரத நாடைலே;

துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை

சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்

சாதி செய்த தவப்பயன் வாழி நீ!


மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்

வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்

நாதந் தானது நாரதர் வீணையோ?

நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?

வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே

மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?

சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?

தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!


அறிவு கொண்ட மனித வுயிர்களை

அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;

நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்

நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,

சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்

தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;

நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்

நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!


ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்

பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!


நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;

நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்

தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்

சாலவே யரி தாவதொர் செய்தியாம்;

குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;

கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்

நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;

நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!


புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்

சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னி லேபொது வான் வழக்கமாம்;

மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்

மாத வப்பெரி யோருட னொப்புற்றே

முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய

முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;


அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!


உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,

ஓது பற்பல நூல்வகை கற்கவும்,

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே

திலக வாணுத லார்நங்கள் பாரத

தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்


சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;

சவுரி யங்கள் பலபல செய்வராம்;

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;

காத்து மானிடர் செய்கை யனைத்தையும்

கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!


போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்

புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!

மாற்றி வையம் புதுமை யுறச்செய்து

மனிதர் தம்மை அமர்க ளாக்கவே

ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்

அருளி நாலொரு கன்னிகை யாகியே

தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்

செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்


--

back to index

index

https://bharathy-songs.blogspot.com/2025/04/index-1-to-10-of-70.html

Popular posts from this blog

INDEX-1 TO 10 of 70

Kuyil paattu by suryaprakash

Sanjay